Sachin finds no boundaries

உலக நாயகனே! உலக நாயகனே!!
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இந்தியாவின் புகழைமீண்டும் உலக அரங்கில் உயர்த்திஇருக்கிறார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிகமாக ரன் எடுத்து, லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த ஐந்தரை அடி எவெரெஸ்ட்டை Genius என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியுமா? சுமார் இருபத்து இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து விளையாடுவது சாதாரணமான விஷயமா? பலத்த போட்டிகள் நிறைந்த சூழலில் தொடர்ந்து விளையாடுவதற்கு எவ்வளவு உடல் வலிமை வேண்டும், எவ்வளவு மன வலிமை வேண்டும், எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும். போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இடையில், எதிரணியின் ஆக்ரோஷத்துக்கு மத்தியில் நூறு மைல் வேகத்தில் வந்து தாக்கும் பந்துகளை பௌண்டரிக்கு அடிப்பது சாதாரண விஷயம் இல்லை. அப்படி என்றால் சாதனைப்பட்டியலில் இடம் பெறுவதுதான் இவருடைய நோக்கமா? இதற்கு பின்னால் எவ்வளவு முயற்சிகள், எத்தனை தியாகங்கள், எத்தனை போராட்டங்கள் இருந்திருக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற தீராத தாகமும், விளையாட்டின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், காதலும் இருந்தாலொழிய இது நிகழ முடியாது.
"பசி நோக்கார், கண் துஞ்சார், செவ்வி அருமையும் பாரார், கருமமேகண் ஆயினார்",
என்ற வாக்கியம் மெய்ப்படுவது இவர்களால் தான். சாதனைகள் எல்லைகளால் வகுக்கப்படுவதில்லை. மேலும் சாதனைகளுக்கு எல்லைகள் என்பதே கிடையாது. நோக்கமும், குறிக்கோளும் தன் உயிரோடு கலந்து இருக்கும்போது எல்லைகள் விரிவடைந்து கொண்டுதான் இருக்கும். இந்த உண்மையை தெளிவாக்கியுள்ளது சச்சினின் இந்த சாதனை.
இந்த நேரத்தில் மற்றுமொரு உலக நாயகனை நாம் நினைக்க வேண்டி உள்ளது. சச்சின் என்ற வைரம் ஜொலிக்க ஆபரணமாக இருந்தது சௌரவ் கங்குலி என்ற தங்கம். சச்சின் தலைமையை விட்டு விலகிய நாள் முதல் அந்த கடினமான பொறுப்பை தான் ஏற்று சச்சினை மேலும் பட்டை தீட்டியது இந்த நாயகன். தற்போது ஏழாயிரம் ரன் களைக்கடந்து சாதனை படைத்துள்ளார். சூழ்ச்சிகள் நிறைந்த உலகின் கபடங்களுக்கு இடையே மிகக்கடினமாக போராடி வெற்றி கண்டுள்ளார். இந்த உலக நாயகர்களை நாம் பாராட்டுவோம்.
வாழ்க சச்சின் !வாழ்க சௌரவ் !!

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe