Posts

Showing posts from January, 2012

கண்ணீரில் ஒரு கவிதை

Image
விடியலை வாஞ்சையோடு விவரிக்க வந்தன வானம்பாடிகள், சுகமான தூக்கத்தை கலைக்கும் 'சுப்ரபாத' பறவைகளோ ? சன்னலை திறந்தாலே ரீங்காரமிடும்  சாம்பல் நிற குருவிகள், உச்சாணிக்கிளையில் உள்ள கூட்டில் உணவுக்கு காத்திருக்கும் தன் குஞ்சுகளுக்கு கொண்டுவந்த பழங்களை பகிர்ந்தளிக்கும் பரவசக்காட்சி. மாலை நேரமென்றாலோ 'அப்பப்பா...' மாமரக்கிளையிளிருந்து தூது விடும்,  அசோக மரத்திலுள்ள 'ஆண்' கிளிக்கு.  அணில்களின் அட்டகாசமோ சொல்லி மாளாது. 'டிஸ்கவரி சேனலோ'? என்று வியக்க வேண்டாம். 'நெய்வேலி'எனும் சோலையில் அன்றாடம் தோன்றும் 24 x 7 நிகழ்வே இது (நேற்று வரை...) சொர்க்கத்தை சூறையாடியது தானே வந்த 'தானே' என்னை வீழ்த்த விடிய விடிய வீசிய சூறைக்காற்றில்    தன்னை இழந்து, தன் அங்கங்களை துண்டித்து அரண் அமைத்தது என்ன நியாயம்? இரவும் பகலும் மீண்டும் வரும், இழந்த என் உலகம் எவ்வாறு வரும்? 'வானம்பாடிகளே வசைபாடுங்கள், குயில் கூட்டங்களே குரல் எழுப்புங்கள், தூது விட்ட கிளிகளே, தூற்றுங்கள் எங்களை.