கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-9 )
'ருத்ர ஏகாதசி' பூஜைகளை தொடர்ந்து 'மரகத லிங்க அபிஷேகம்' நடந்தது. அது பற்றி இன்று தெரிந்து கொள்வோம். மரகதம், ஆங்கிலத்தில் 'எமரால்டு' என்று சொல்லுவார்கள். இயற்கையில் பச்சை நிறமுடையது. மரகத லிங்கம் என்பதும் பச்சை நிறமுடையது. மிகவும் அரிதானது இந்த மரகத லிங்கம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 'உத்திரகோச மங்கை' என்று ஒரு மிக பழைமையான சிவாலயம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் 'மரகத நடராஜர்' சன்னதி உள்ளது. வருடம் முழுவதும் சந்தனக்காப்பிலேயே தான் நடராஜர் காட்சி அளிப்பார். ஒரு நாள் தவிர, ஆம். ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டும், மரகத நடராஜரை தரிசிக்கலாம், பச்சை நிறத்தில். மிகவும் சிறப்பு மிக்க ஆலயம். இப்போது மரகத லிங்க அபிஷேகத்தை பற்றி மேலும் சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு 'அபிஷேகப்பிரியர்' என்று ஒரு பெயர் உண்டு. அதிலும், தேன், சந்தனம், மஞ்சள், புஷ்பம், விபூதி, பஞ்சமிருதம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது, நமக்கு வரங்களை அள்ளிக்கொடுப்பார் அல்லவா! லிங்கத்திலிருந...