கடவூர் டு காத்மாண்டு!! (பாகம்-3 )
விடியல்காலை நாலரை மணிக்கு மும்பை விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். தூக்கக்கலக்கம் இருந்ததால், அவரவர்கள் ஒரு சாய்வு நாற்காலியை பிடித்து வழுக்கியபடியே இளைப்பாறினோம். எங்களுக்கு காத்மாண்டு செல்லும் அடுத்த விமானம் 11 :30 க்கு தான் என்பதால் நிதானமாக காலைக்கடன்களையும் சிற்றுண்டியையும் முடித்துக்கொண்டு அறிவிக்கப்பட்ட வாயிலுக்கு சென்றடைந்தோம். விமானம் 'ஹவுஸ் புல்.' யாத்திரிகர்கள் சிலரும், இடம்பெயந்தோர் பலரும் விமானத்தை நிரப்பியிருந்தனர். நேபாளத்துக்கு இவ்வளவு இடம்பெயந்தோரை நான் எதிர்பார்க்கவில்லை. பணி நிமித்தமாக இந்தியாவுக்கு நேபாளிகள் நிறையபேர் வந்து போகிறார்கள் என்பது கண்கூடாக பார்க்க முடிந்தது. நாங்கள் பயணித்த 6 E 1157 இண்டிகோ விமானம் இரண்டரை மணிநேரம் சிறகடிக்க பிறகு, சில நிமிடங்கள் முன்னதாகவே, 'த்ரிபுவன் சர்வதேச விமான' நிலையத்தை அடைந்தது. இமய மலையின் அழகை மேலிருந்து ரசிப்பது ஒரு அழகுதான் என்றாலும், மேகமூட்டம் அதை தடுக்கத்தான் செய்தது. 'சர்வதேச விமான நிலையமாயிற்றே!' என்றெல்லாம் கற்பனை கோட்டை கட்ட வேண்டாம். மிக சிறிய நமது இரண்டாம் நிலை நகரங்களின் விமான நிலையம் அள...